கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டவற்றில் மிகவும் சக்திவாய்ந்த எல்-நினோ (El Niño) நிலைமை எதிர்வரும் காலத்தில் உருவாகக்கூடும் என ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவிக்கையில், இதன் தாக்கத்தால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் வறட்சி நிலை ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிப்பதன் மூலம் உலகளாவிய காலநிலை அமைப்புகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் இயற்கை நிகழ்வாக எல்-நினோ நிலை அறியப்படுகிறது.
இதன் விளைவாக, கிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றோட்டங்களும், வெப்பமான கடல் நீரோட்டங்களும் ஆசியப் பிராந்தியத்தை நோக்கி நகரத் தூண்டப்படுகின்றன. இதனால் அந்தக் காலப்பகுதியில் வளிமண்டல வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும்.
இந்த எல்-நினோ நிலை காரணமாக இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வழக்கமான மழைப்பொழிவு குறைந்து கடுமையான வறட்சி நிலை உருவாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதன் மற்றொரு விளைவாக பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அதிக மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியமும் காணப்படுகின்றது.
(colombotimes.lk)
